தொண்டு செய்யும் அடிமை

சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு 
ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது 

நந்தனார் சரித்திரத்திலுள்ள 
"மாடு தின்னும் புலையா!-உனக்கு மார்கழித் திருநாளா?" 
என்ற பாட்டின் வர்ண மெட்டு

1.

தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் 
      சுதந்திர நினைவோடா? 
பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் 
      பாத்திர மாவாயோ?
(தொண்டு)

2.



ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் 
      சமயச் சண்டை போச்சோ? 
நீதி சொல்ல வந்தாய்!-கண்முன் 
      நிற்கொ ணாது போடா!
(தொண்டு)

3.

அச்சம் நீங்கி னாயோ?-அடிமை! 
      ஆண்மை தாங்கி னாயோ? 
பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை 
      பேணுத லொழித் தாயோ?
(தொண்டு)

4.

கப்ப லேறு வாயோ?-அடிமை! 
      கடலைத் தாண்டு வாயோ? 
குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை! 
      கொற்றத் தவிசுமுண் டோ?
(தொண்டு)

5.

ஒற்று மைபயின் றாயோ?-அடிமை! 
      உடம்பில் வலிமையுண் டோ? 
வெற்றுரை பேசாதே!-அடிமை! 
      வீரியம் அறிவாயோ?
(தொண்டு)

6.

சேர்ந்து வாழு வீரோ-உங்கள் 
      சிறுமைக் குணங்கள் போச்சோ? 
சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள் 
      சோம்பரைத் துடைத்தீரோ?
(தொண்டு)

7.

வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி 
      வெருவலை ஒழித்தாயோ? 
உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம் 
      உனக்கில்லை மறந்திடடா!
(தொண்டு)

8.

நாடு காப்ப தற்கே-உனக்கு 
      ஞானம் சிறிதுமுண்டோ? 
வீடு காக்கப் போடா!-அடிமை! 
      வேலை செய்யப் போடா;
(தொண்டு)

9.

சேனை நடத்து வாயோ?-தொழும்புகள் 
      செய்திட விரும்பாயோ? 
ஈன மான தொழிலே உங்களுக்கு 
      இசைவதாகும் போடா!
(தொண்டு)

No comments:

Post a Comment