கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் - புன்னாகவராளி

பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணங்கள்

1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்னை)

2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று (நின்னை)



3. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்னை)

4. துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்னை)

5. நல்லது தீயது நாமறியோம்! அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! (நின்னை)

No comments:

Post a Comment