செந்தமிழ் நாடு

1.செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் 
      தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் 
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு 
      சக்தி பிறக்குது மூச்சினிலே
(செந்தமிழ்)

2.

வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் 
      வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல 
காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் 
      கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
(செந்தமிழ்)

3.

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் 
      கண்டதோர் வையை பொருனைநதி-என 
மேவி யாறு பலவோடத்-திரு 
      மேனி செழித்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

4.

முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று 
      மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம் 
எத்தனை யுண்டு புவிமீதே-அவை 
      யாவும் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

5.

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று 
      நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட 
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ் 
      மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
(செந்தமிழ்)

6.

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் 
      கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல 
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம் 
      பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு.
(செந்தமிழ்)

7.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து 
      வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை 
அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி 
      யாரம் படைத்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

8.

சிங்களம் புட்பகம் சாவக-மாதிய 
      தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு 
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று 
      சால்புறக் கண்டவர் தாய்நாடு.
(செந்தமிழ்)

9.

விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும் 
      வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர் 
பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப் 
      பார்த்திவர் நின்ற தமிழ்நாடு.
(செந்தமிழ்)

10.

சீன மிசிரம் யவனரகம்-இன்னும் 
      தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை 
ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக 
      நன்று வளர்த்த தமிழ்நாடு.
(செந்தமிழ்)

No comments:

Post a Comment