பாரத சமுதாயம்

    ராகம்-பியாக்    தாளம்-திஸ்ர ஏகதாளம்
பல்லவி
பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய    (பாரத)
அனுபல்லவி
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்  
      முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
      உலகத் துக்கொரு புதுமை-வாழ்க    (பாரத)
சரணங்கள்
மனித ருணவை மனிதர் பறிக்கம்
      வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
      வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
      வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
      வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
      எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
      கணக்கின் றித்தரு நாடு-இது
      கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
      கணக்கின் றித்தரு நாடு-வாழ்க!    (பாரத)

2.  
இனியொரு விதிசெய் வோம்-அதை
      எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
      ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க!    (பாரத)

3.  
"எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்"
என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
      இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
      இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
      இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க!    (பாரத)

4.  
எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
      எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
      எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
      எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
      எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க    (பாரத)

No comments:

Post a Comment