சுதந்திரப் பள்ளு

பள்ளர் களியாட்டம்

ராகம்-வராளிதாளம்-ஆதி

பல்லவி

ஆடுவோமே-பள்ளுப் பாடு வோமே; 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
(ஆடுவோமே)

சரணங்கள்

1.

பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வென்ளைப் 
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே-பிச்சை 
ஏற்பாரைப் பணிகின்ற காலமும் போச்சே-நம்மை 
ஏய்ப்போருக் கேவல்செய்யும் காலமும் போச்சே
(ஆடுவோமே)

2.

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம் 
எல்லோரும் சமமென்பது உறுதி யாச்சு; 
சங்குகொண்டே வெற்றி ஊது வோமே-இதைத் 
தரணிக்கெல் லாமெடுத்து ஓது வோமே
(ஆடுவோமே)

3.

எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே-பொய்யும் 
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே-இனி 
நல்லோர் பெரிய ரென் னும் காலம் வந்ததே-கெட்ட 
நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே
(ஆடுவோமே)

4.

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-வீணில் 
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம். 
விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்-வெறும் 
வீணருக்கு உழைத்துடலம் ஓய மாட்டோம்
(ஆடுவோமே)

5.

நாமிருக்கும் நாடுநமது என்ப தறிந்தோம்-இது 
நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம்-இந்தப் 
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்-பரி 
பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம்.
(ஆடுவோமே)

No comments:

Post a Comment