சத்ரபதி சிவாஜி

தன் சைனியத்திற்குக் கூறியது

ஜயஜய பவானி!ஜயஜய பாரதம்! 
ஜயஜய மாதா!ஜயஜய துர்க்கா! 
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!



சேனைத் தலைவர்காள்! சிறந்தமந் திரிகாள்! 
யானைத் தலைவரும் அருந்திறல் வீரர்காள்!
5


அதிரத மன்னர்காள்! துரகத் ததிபர்காள்! 
எதிரிகள் துணுக்குற இடித்திடு பதாதிகாள்! 

வேலெறி படைகாள்!சூலெறி மறவர்காள்! 
கால னுருக்கொளும் கணைதுரந் திடுவீர், 



மற்றுமா யிரவிதம் பற்றலர் தம்மைச்
10

செற்றிடும் திறனுடைத் தீரரத் தினங்காள்! 

யாவிரும் வாழிய! யாவிரும் வாழிய!
தேவிநுந் தமக்கெலாம் திருவருள் புரிக! 

மாற்றலர் தம்புலை நாற்றமே யறியா 
ஆற்றலகொண் டிருந்நததிவ் வரும்புகழ் நாடு!
15


வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர் 
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி? 

வீரரும் அவரிசை விரித்திடு புலவரும் 
பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!

தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும்
20

நிர்மல முனிவரும் நிறைந்தநன் னாடு! 

வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை 
ஊரவர் மலடி யென் றுரைத்திடு நாடு! 

பாரத பூமி பழம்பெரும் பூமி; 
நீரதன் புதல்வர்; இந் நினைவகற் றாதீர்!
25


பாரத நாடு பார்க்கெலாம் திலகம் 
நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்! 

வானக முட்டும் இமயமால் வரையும் 
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும் 

காத்திடும் நாடு! கங்கையும் சிந்துவும்
30

தூத்திரை யமுயையும் சுனைகளும் புனல்களும் 

இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும் 
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு! 

மைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க 
பைந்நிற முகில்கள் வழங்குபொன் னாடு!
35


தேவர்கள் வாழ்விடம், திறலுயர் முனிவர் 
ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு! 

ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி 
வானவர் விழையும் மாட்சியர் தேயம்! 

பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?
40

நீரதன் புதல்வர்;இந் நினைவகற் றாதீர்! 

தாய்த் திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர், 
பேய்த்தகை கொண்டோர்,பெருமையும் வண்மையும், 

ஞானமும் அறியா நவைபுரி பகைவர், 
வானகம் அடக்க வந்திடும் அரக்கர் போல்
45

இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்றார்! 

ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் 
பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் 

மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு 
ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்றார்!
50

சாத்திரக் தொகுதியைத் தாழ்த்துவைக் கின்றார் 
கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்றார்! 

எண்ணில துணைவர்காள்!எமக்கிவர் செயுந்துயர்;
கண்ணியம் மறுத்தனர்;ஆண்மையுங் கடிந்தனர்; 

பொருளினைச் சிதைத்தனர்;மருளினை விதைத்தனர்;
55

திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்; 

பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்; 
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்; 

வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்துநம் 
ஆரியம் புலையருக் கடிமைக ளாயினர்
60


மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை? 
வெற்றிகொள் புலையர்தாள் வீழ்நதுகொல் வாழ்வீர்? 

மொக்குள்தான் தோன்றி முடிவது போல 
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்! 

தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை
65

மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வுகொல்? 

மானமொன் றிலாது மாற்றலர் தொழும்பராய் 
ஈனமுற் றிருக்க எவன்கொலோ விரும்புவன்? 

தாய்பிறன் கைப்படச் சகிப்பவ னாகி 
நாயென வாழ்வோன் நமரில்இங் குளனோ?
70


பிச்சைவாழ் வுகந்து பிறருடை யாட்சியில் 
அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன். 

புன்புலால் யாக்கையைப் போற்றியே தாய்நாட்டு 
அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன். 

மாட்சிதீர் மிலேச்சர் மனப்படி யாளும்
75

ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன். 

ஆரியத் தன்மை அற்றிடுஞ் கிறியர் 
யாரிவன் உளரவர் யாண்டேனும் ஒழிக! 

படைமுகத்து இறந்து பதம்பெற விரும்பாக் 
கடைபடு மாக்களென் கண்முன்நில் லாதீர்!
80


சோதரர் தம்மைத் துரோகிகள் அழிப்ப 
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! 

நாடெலாம் பிறர்வசம் நண்ணுதல் நினையான் 
வீடுசென் றொளிக்க விரும்புவோன் விரும்புக! 

தேசமே நலிவொடு தேய்ந்திட மக்களின்
85

பாசமே பெரிதெனப் பார்ப்பவன் செல்க! 

நாட்டுளார் பசியினால் நலிந்திடத் தன்வயிறு 
ஊட்டுதல் பெரிதென உன்னுவோன் செல்க! 

ஆணுருக் கொண்ட பெண்களும் அலிகளும் 
வீணில்இங் கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்
90


ஆரியர் இருமின்!ஆண்கள் இங்கு இருமின்! 
வீரியம் மிருந்த மேன்மையோர் இருமின்! 

மானமே தெரிதென மதிப்பவர் இருமின்! 
ஈனமே பொறாத இயல்பினர் இருமின்! 

தாய்நாட்டன்புறு தனையர்இங்கு இருமின்!
95

மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! 

புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! 
கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்! 

ஊரவர் துயரில் நெஞ் சுருகுவீர் இருமின்! 
சோரநெஞ் சில்லாத் தூயவர் இருமின்!
100


தேவிதாள் பணியுந் தீரர்இங்கு இருமின்! 
பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்! 

உடலினைப் போற்றா உத்தமர் இருமின்! 
கடல்மடுப் பினும்மனம் கலங்கலர் உதவுமின்! 

வம்மினோ துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்!
105

நம்மனோ ராற்றலை நாழிகைப் பொழுதெனும் 

புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? 
மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின் 

இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும். 
பன்னரும் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும்
110


வீமனும் துரோணனும் வீட்டுமன் தானும் 
இராமனும் வேறுள இருந்திறல் வீரரும் 

நற்றுணை புரிவர்;வானக நாடுறும்; 
வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம். 

பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர்
115

செற்றினி மிலேச்சரைக் தீர்த்திட வம்மின்! 

ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! 
நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! 

வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், 
ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின்
120


உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள் 
உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! 

நம் இதம்;பெருவளம் நலிந்திட விரும்பும் 
(வன்மியை)வேரறத் தொலைத்தபின் னன்றோ 

ஆணெனப் பெறுவோம்;அன்றிநாம் இறப்பினும்
125

வானுறு தேவர் மணியுல கடைவோம்! 

வாழ்வமேற் பாரத வான்புகழ் தேவியைத் 
தாழ்வினின் றுயர்த்திய தடம்புகழ் பெறுவோம்! 

போரெனில் இதுபோர்!புண்ணியத் திருப்போர்! 
பாரினில் இதுபோற் பார்த்திடற்கெளிதோ?
130


ஆட்டினைக் கொன்று வேள்விகள் இயற்றி 
வீட்டினைப் பெறுவான் விரும்புவார் சிலரே; 

நெஞ்சகக் குருதியை நிலத்திடை வடித்து 
வஞ்சக மழிக்கும் மாமகம் புரிவம்யாம். 

வேள்வியில் இதுபோல் வேள்வியொன் றில்லை;
135

தவத்தினில் இதுபேவால் தவம்பிறி தில்லை 

முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று 
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட 

மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர் 
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று
140


இன்னவர் இருத்தல்கண்டுஇதயம்நொந் தோனாய்த் 
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர் 

"ஐயனே!" இவர்மீ தம்பையோ தொடுப்பேன்! 
வையகத் தரசும் வானக ஆட்சியும் 

போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்
145

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்; 
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது; 

வாயுலர் கின்றது;மனம் பதைக் கின்றது; 
ஓய்வுறுங் கால்கள்;உலைந்தது சிரமும்; 

வெற்றியை விரும்பேன்;மேன்மையை விரும்பேன்;
150

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்; 

எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்; 
சினையுறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?" 

எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன் 
னப்படை வில்லைக் களத்தினில் எறிந்து
155


சோர்வொடு வீழ்ந்தனன்; சுருதியின் முடிவாய்த் 
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான் 

வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி, 
"புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால், 

அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்
160

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய். 

உண்மையை அறியாய்;உறவையே கருதிப் 
பெண்மைகொண் டேதோ திற்றிநிற் கின்றாய் 

வஞ்சகர்,தீயர்,மனிதரை வருத்துவோர், 
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்;இன்னோர்
165


தம்மொடு பிறந்த சகோதர ராயினும், 
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம், 

ஆரிய நீதிநீ அறிந்திலை போலும்! 
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை 

அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைக்தும்
170

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை? 

பேடிமை யகற்று!நின் பெருமையை மறந்திடேல்! 
ஈடிலாப் புகழினாய்!எழுகவோ எழுக! 

என்றுமெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக் 
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்
175


அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய் 
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச் 

சுற்றமும் நோக்கான் தோழமை மதியான் 
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன், 

விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில்
180

இசையுநற் றவத்தால் இன் றுவாழ்ந் திருக்கும் 

ஆரிய வீரர்காள்! அவருடை மாற்றலர், 
தேரில்,இந் நாட்டினர்,செறிவுடை உறவினர்; 

நம்மையின் றெதிர்க்கும் நயனிலாப் புல்லோர் 
செம்மைதீர் மிலேச்சர், தேசமும் பிறிதாம்
185


பிறப்பினில் அன்னியர்,பேச்சினில் அன்னியர் 
சிறப்புடை யாரியச் சீர்மையை அறியார்.

No comments:

Post a Comment