தேச பக்தர் சிதம்பரம்பிள்ளை மறுமொழி


சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே 
      துஞ்சிடோம்:-இனி-அஞ்சிடோம்; 
எந்த நாட்டினும் இந்த அநீதிகள் 
      ஏற்குமோ? தெய்வம்-பார்க்குமோ?1

வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை வாழ்த்து வோம்;-முடி-தாழ்த்துவோம்; 
எந்தம் ஆருயி ரன்னையைப் போற்றுதல் 
      ஈனமோ?-அவ-மானமோ?2

பொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளை கொண்டு 
      போகவோ?-நாங்கள்-சாகவோ? 
அழுது கொண்டிருப் போமோ? ஆண் பிள்ளைகள் 
      அல்லமோ?-உயிர்-வெல்லமோ?3

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் 
      நாய்களோ?-பன்றிச் சேய்களோ? 
நீங்கள் மட்டும் மனிதர்க ளோ?இது 
      நீதமோ?-பிடி-வாதமோ?4

பார தத்திடை அன்பு செலுத்துதல் 
      பாபமோ?-மனஸ்-தாபமோ? 
கூறும் எங்கள் மிடிமையைத் தீர்ப்பது 
      குற்றமோ?-இதற்-செற்றமோ?5

ஒற்றுமைவழி யொன்றை வழியென்பது 
      ஓர்ந்திட்டோம்;-நன்கு-தேர்ந்திட்டோம்; 
மற்றும் நீங்கள் செய்யுங்கொடு மைக்கெலாம் 
      மலைவு றோம்;-சித்தம்-கலைவுறோம்.6

சதையைத் துண்டுதுண் டாக்கினும் என்னெண்ணம் 
      சாயுமோ?-ஜீவன்-ஓயுமோ? 
இதையத் துள்ளே இலங்கு மஹாபக்தி 
      ஏகுமோ-நெஞ்சம்-வேகுமோ?7

No comments:

Post a Comment