வெள்ளைக்கார விஞ்ச் துரை கூற்று

ராகம்-தண்டகம்தாளம்-ஆதி

1.

நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை 
      நாட்டினாய்;-கனல்-மூட்டினாய்; 
வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே 
      மாட்டுவேன்;-வலி-காட்டுவேன்.
(நாட்டி)

2.

கூட்டங் கூடி வந்தே மாதரமென்று 
      கோஷித்தாய்;-எமைத் தூஷித்தாய்; 
ஓட்டம்நாங்களெடுக்க வென்றே கப்பல் 
      ஓட்டினாய்; பொருள்-ஈட்டினாய்.
(நாட்டி)

3.

கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள் 
      கூறினாய்;-சட்டம்-மீறினாய்; 
ஏழைப்பட் டிங்கு இறத்தல் இழிவென்றே 
      ஏசினாய்;-வீரம்-பேசினாய்
(நாட்டி)

4.

அடிமைப் பேடிகள் தம்மை மனிதர்கள் 
      ஆக்கினாய்;-புன்மை-போக்கினாய்; 
மிடிமை போதும் நமக்கென் றிருந்தோரை 
      மீட்டினாய்;-ஆசை-ஊட்டினாய்
(நாட்டி)

5.

தொண்டொன் றேதொழி லாக்கொண் டிருந்தோரைத் 
      தூண்டினாய்; புகழ்-வேண்டினாய் 
கண்ட கண்டதொழில் கற்க மார்க்கங்கள் 
      காட்டினாய்;-சோர்வை-ஓட்டினாய்.
(நாட்டி)

6.

எங்கும் இந்தசுய ராஜ்ய விருப்பத்தை 
      ஏவினாய்;-விதை-தூவினாய்; 
சிங்கம் செய்யும் தொழிலைச் சிறுமுயல் 
      செய்யவோ?-நீங்கள்-உய்யவோ?-
(நாட்டி)

7.

சுட்டு வீழ்த்தியே புத்தி வருத்திடச் 
      சொல்லுவேன்:-குத்திக்-கொல்லுவேன்; 
தட்டிப் பேசுவோ ருண்டோ?சிறைக்குள்ளே 
      தள்ளுவேன்:-பழி-கொள்ளுவேன்.
(நாட்டி)

No comments:

Post a Comment