தாதாபாய் நவுரோஜி

முன்னாளில் இராமபிரான் கோதமனா
      தியபுதல்வர் முறையில் நின்று
பன்னாடு முடிவணங்கத் தலைமைநிறுத்
      தியஎமது பரத கண்ட
மின்னாள்இங் கிந்நாளின் முதியோளாய்ப்
      பிறரெள்ள வீழ்ந்த காலை
அன்னாளைத் துயர்தவிர்ப்பான் முயல்வர்சில
      மக்களவ ரடிகள் சூழ்வாம்.    1


அவ்வ்றிஞ ரனைவோர்க்கும் முதல்வனாம்
      மைந்தன், தன் அன்னை கண்ணீர்
எவ்வகையி னுந்துடைப்பேன் இன்றேலென்
      உயிர்துடைப்பேன் என்னப் போந்து,
யௌவனநாள் முதற்கொ டுதான்
      எண்பதின்மேல் வயதுற்ற இன்றுகாறும்
செவ்வியுறத் தனதுடலம் பொருளாவி
      யானுழைப்புத் தீர்த லில்லான்.    2


கல்வியைப்போல் அறிவும், அறி வினைப்போலக்
         கருணையும்,அக் கருணை போலப்
பல்விதவூக் கங்கள்செயுந் திறனுமொரு
      நிகரின்றிப் படைத்த வீரன்,
வில்விறலாற் போர்செய்தல் பயனிலதாம்
      என அதனை வெறுத்தே உண்மைச்
சொல்விறலாற் போர்செய்வோன் பிறர்க்கன்றித்
      தனக்குழையாத் துறவி யாவோன்.    3


மாதாவாய் விட்டலற அதைச்சிறிதும்
      மதியாதே வாணாள் போக்கும்
தீதாவார் வரினுமவர்க் கினியசொலி
      நன்குணர்த்துஞ் செவ்வி யாளன்,
வேதாவா யினுமவனுக் கஞ்சாமே
      உண்மைநெறி விரிப்போன் எங்கள்
தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்
      நவுரோஜி சரணம் வாழ்க!    4


எண்பஃதாண் டிருந்தஅவன் இனிப்பல்லாண்டு
      இருந்தெம்மை இனிது காக்க!
பண்பல்ல நமக்கிழைப்போர் அறிவுதிருந்
      துக!எமது பரத நாட்டுப்
பெண்பல்லார் வயிற்றினுமந் நவுரோஜி
      போற்புதல்வர் பிறந்து வாழ்க!
விண்புல்லு மீன்களென அவனன்னார்
      எவ்வயினும் மிகுக மன்னோ!    5

No comments:

Post a Comment