தமிழ்த் தாய்

தன் மக்களைப் புதிய சாத்திரம் வேண்டுதல்
தாயுமானவர் ஆனந்தக்களிப்புச் சந்தம்
ஆதிசிவன் பெற்று விட்டான்-என்னை
      ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே-நிறை
      மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.    1

மூன்று குலத்தமிழ் மன்னர்-என்னை
      மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே-உயர்
      ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.    2

கள்ளையும் தீயையும் சேர்த்து-நல்ல
      காற்றையும் வான வெளியையும சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள்-பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.    3

சாத்திரங் கள்பல தந்தார்-இந்தத்
      தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன்-தன்முன்
      நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.    4

நன்றென்றுந் தீதென்றும் பாரான்-முன்பு
      நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல்-வையச்
      சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.    5

கன்னிப் பருவத்தில் அந்நாள்-என்தன்
      காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்
என்னென்ன வோபெய ருண்டு-பின்னர்
      யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்!    6

தந்தை அருள்வலி யாலும்-முன்பு
      சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன்-என்னை
      ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்.    7

இன்றொரு சொல்லினைக் கேட்டேன்-இனி
      ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு
      கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!    8

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
      பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
      மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.    9

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
      சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
      மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"    10

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
      இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
      செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!    11

தந்தை அருள்வலி யாலும்-இன்று
      சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும்-புகழ்
      ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.    12

No comments:

Post a Comment