பூபேந்திரர் விஜயம்

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்
      விவேகானந்தப் பரமன் ஞான
ரூபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்
      விண்ணவர்த முலகை யாள்ப்ர
தாபேந்திரன் கோப முறினுமதற்கு
      அஞ்சிய றந் தவிர்கி லாதான்
பூபேந்திரப் பெயரோன் பாரதநாட்
      டிற்கடிமை பூண்டு வாழ்வோன்    1


வீழ்த்தல்பெ றத்தருமமெலாம், மறமனைத்துங்
      கிளைத்துவர, மேலோர் தம்மைத்
தாழ்த்ததமர் முன்னோங்க நிலைபுரண்டு
      பாதகமே ததும்பி நிற்கும்
பாழ்த்தகலி யுகஞ்சென்று மற்றொருகம்
      அருகில்வரும் பான்மை தோன்றக்
காழ்த்த மன வீரமுடன் யுகாந்தரத்தின்
      நிலையினிது காட்டி நின்றான்    2


மண்ணாளு மன்னரவன் தனைச்சிறைசெய்
      திட்டாலும் மாந்த ரெல்லாம்
கண்ணாகக் கருதியவன் புகழோதி
      வாழ்த்திமனங் களிக்கின் றாரால்;
எண்ணாது நற்பொருளைக் தீதென்பார்
      சிலருலகில் இருப்ப ரன்றே?
விண்ணாரும் பரிதியொளி வெறுத்தொருபுள்
      இருளினிது விரும்பல் போன்றே!    3


இன்னாத பிறர்க்கெண்ணான் பாரதநாட்
      டிற்கிரங்கி இதயம் நைவான்
ஒன்னாரென் றெவருமிலான் உலகனைத்தும்
      ஓருயிரென் றுணர்ந்த ஞானி,
அன்னானைச் சிறைப்படுத்தார் மேலோர்தம்
      பெருமையெதும் அறிகி லாதார்.
முன்னாளில் துன்பின்றி இன்பம்வரா
      தெனப்பெரியோர் மொழிந்தா ரன்றே!    4

No comments:

Post a Comment