பாரத தேவியின் திருத்தசாங்கம்

   
நாமம்
(காம்போதி)

பச்சை மணிக்கிளியே!பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்!-இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.    1

நாடு
(வசந்தா)

தேனார் மொழிக்கிள்ளாய்!தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய்! வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.    2

நகர்
(மணியரங்கு)

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்னையுற வாழும் நகரெ துகொல்?-சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.    3

ஆறு
(சுருட்டி)

வன்னக் கிளி!வந்தே மாதரமென் றே துவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்!-நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன் விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.    4

மலை
(கானடா)

சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்!-ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.    5

மலை
(கானடா)

சீருஞ் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்!-தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சுகம்
அரிமிசையே ஊர்வாள் அவள்.    6

ஊர்தி
(தன்யாசி)

கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்?-பொரு(பவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு.    7

படை
(முகாரி)

ஆசை மரகதமே!அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்!-‘பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே’ என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு.    8

தார்
(பிலக்ரி)

வாராய் இளஞ்சுகமே!வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார்கூறாய்!-சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து.    9

கொடி
(கேதாரம்)

கொடிப்பவள வாய்ககிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடி தான் மற்றென்?-அடிப்(பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.    10

No comments:

Post a Comment